தொலைபேசியில் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்த பெண்!




அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குநருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்று கேட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார். உடனடியாக அவர் மஹிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார்.
தொலைபேசியை எடுத்து என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்? என்று கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார். வாழ்க்கைச்செலவு உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொண்ட அந்தப் பெண், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தயவு செய்து எங்களுக்கு நிவாரணம் அளியுங்கள் என்று கேட்டார்.
சந்தேகம் கொண்ட ஜனாதிபதி யார் பேசுவது என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் அனோமா என்று பதிலளித்து விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்ட ராஜபக்ச, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு அனோமாவை தெரியும். அவருடன் நான் பேசியுள்ளேன்.
உங்களைப் போல் அவர் ஒரு வாயாடிப் பெண் அல்ல. அவர் நன்றாக நடந்து கொள்வார். நீங்கள் அனோமாவாக இருந்தால், உங்களின் கணவன் சிறையில் இருக்கும் போது சிரிக்கிறீர்களே என்று கூறிவிட்டு கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார்.
உடனடியாக அவர் தொலைபேசியில் அழைத்த பெண் யார் என்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.  விரைவாகவே அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஒரு மனநலம் குன்றிய பெண் என்பது தெரிய வந்ததும், அந்த விவகாரம் அத்துடன் முடிக்கு வந்தது.
சண்டே ரைம்ஸ் இது குறித்த செய்தியை சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.